செய்திகள்
கைது

புதுவையில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

Published On 2019-12-28 04:45 GMT   |   Update On 2019-12-28 04:45 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டியும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகவும் புதுவையில் இருந்து மதுபாட்டில் கடத்துவதை தடுக்கும் பொருட்டு பட்டானூர் சுங்கச்சாவடியில் மதுவிலக்கு போலீசார் இரவும்- பகலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல் இன்று அதிகாலை 3 மணியளவில் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த காரின் இருக்கைகளை அகற்றி விட்டு பார்த்த போது அதில் பெட்டி, பெட்டியாக பீர்பாட்டில்கள் இருந்தன. மொத்தம் 27 அட்டை பெட்டிகளில் 628 பீர் பாட்டில்களும், 35 லிட்டர் சாராயமும் இருந்தது.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் வேலையூர் அம்பேத்கார் வீதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 38) என்பதும், இவர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்க புதுவையில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பாஸ்கரனை போலீசார் கைது செய்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News