ஆத்தூர் அருகே மரத்தில் கார் மோதி திருச்செந்தூர் தொழிலதிபர் பலி
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிட்டப்பா (வயது 51). இவர் திருச்செந்தூரில் ஓட்டல், காபி கடை, லாட்ஜ் உள்ளிட்டவை நடத்தி வந்தார். இவரது மனைவி வசந்தி (46). இவர்களுக்கு சக்தி (22), கந்தன் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் சக்தி சென்னையில் படித்து வருகிறார். கந்தன் நெல்லையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிட்டப்பா, தனது நண்பரான திருச்செந்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (42) என்பவருடன் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்தவுடன் நேற்று மீண்டும் அவர்கள் காரில் ஊர் திரும்பினர். காரை கிட்டப்பா ஓட்டினார். இந்நிலையில் இன்று அதிகாலை கார் பழையகாயலை அடுத்த முக்காணி பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரமுள்ள புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்த கிட்டப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ராதாகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பலியான கிட்டப்பா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.