செய்திகள்
குழந்தை

17 வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்ற பெண்: தாய்-கணவர் மீது வழக்கு

Published On 2019-11-27 13:11 GMT   |   Update On 2019-11-27 13:11 GMT
கிருமாம்பாக்கம் அருகே 17 வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் தாய்-கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் சுரேஷ் இறந்து விட்டார். அவரது மகள் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியை சேர்ந்த சின்னையன் என்பவரை காதலித்து வந்தார். 

செல்போனில் வந்த ராங்க் நம்பர் மூலம் சின்னையனுடன்தொடர்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. அவர்கள் 2018-ம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்துக்கு பிறகு இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். இதில் கர்ப்பமான அந்த இளம்பெண் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் பிரசவத்துக்காக புதுவை ராஜீவ்காந்தி குழந்தை கள்நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. 

இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அந்த இளம்பெண்ணின் வயது குறித்து சந்தேகம் வரவே சிறார் பாதுகாப்பு நல அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். 

இதுகுறித்து அதிகாரி ராஜேந்திரன் கிருமாம் பாக்கம்  போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து விசாரித்ததில் அந்த பெண்ணுக்கு 17 வயது மட்டுமே ஆகி இருந்தது தெரியவந்தது.

18 வயதுக்கு முன்பு பெண்ணுக்கு திருமணம் செய்தால் சட்டப்படி குற்றமாகும். இதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் தன் வந்திரி இதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் தாயார் சாந்தி, கணவர் சின்னையன், பெண்ணின் தாத்தா ஆகிய 3 பேர் மீதும்  3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News