செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

திருவாரூரில் பள்ளி வகுப்பறையில் மாணவன் தற்கொலை

Published On 2019-11-11 04:11 GMT   |   Update On 2019-11-11 04:11 GMT
திருவாரூரில் பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ரஞ்சித் (வயது 16). இவர் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் அங்குள்ள விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வரை பள்ளியில் உள்ள விடுதியில் ரஞ்சித் இருந்தார். அதன்பின்னர் அவர் திடீரென பள்ளி வகுப்பறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவர் ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி வகுப்பறையில் ரஞ்சித் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மாணவர் ரஞ்சித் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு கடந்த வெள்ளிக்கிழமை தான் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று பிற்பகலில் தான் தற்கொலை செய்து கொண்டார். மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

வகுப்பறையில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News