செய்திகள்
அரிவாள் வெட்டு

ஊத்துக்கோட்டை அருகே குடிபோதையில் 4 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர்

Published On 2019-11-05 07:10 GMT   |   Update On 2019-11-05 07:10 GMT
ஊத்துக்கோட்டை அருகே குடிபோதையில் 4 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தண்டலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (25). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு முக்கரம்பாக்கத்தில் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்தினார்.

குடிபோதையில் அந்த வழியாக சென்ற மக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல், அன்பழகன், சுதாகர், முருகேசன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு ஹரிபாபு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஹரிபாபுவை கைது செய்யக்கோரி 4 பேரின் உறவினர்கள் சுமார் 100 பேர் தண்டலத்தில் ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஹரிபாபுவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாருக்கு கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியில் ஹரிபாபு தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் விரைந்து சென்று ஹரிபாபுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News