செய்திகள்
விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து விபத்து - 3 பேர் பலி

Published On 2019-09-21 06:20 GMT   |   Update On 2019-09-21 06:20 GMT
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை:

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36) இவரது நண்பர் ஸ்ரீநாத் (26). நேற்று நள்ளிரவு சதீஷ்குமார், ஸ்ரீநாத் மற்றும் அவரது நண்பர் ஒருவர் ஒரு காரில் சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்றனர். காரை சதீஷ்குமார் ஓட்டிசென்றார்.

இன்று காலை 6 மணியளவில் அவர்கள் வந்தகார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை புறவழிசாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர்லாரி கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். மேலும் காரில் இருந்த ஸ்ரீநாத் அவரது நண்பர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும். எலவனாசூர் கோட்டை போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 2 பேரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் தக்கா பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 46) கூலி தொழிலாளி. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் ஒலையனூர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றார்.

அப்போது அவருடன் அவரது பேத்தி ரீபா(2) என்பவரும் சென்றனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு மோட்டார் சைக்கிளில் முகமது அலி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முகமது அலி அவரது பேத்தி ரீபா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

இந்த விபத்து குறித்து உளுந்தூர் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News