ஜல்லிக்கட்டு போராட்டத்தை தூண்டியதாக வழக்கு: மதுரை கோர்ட்டில் முகிலன் ஆஜர்
மதுரை:
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரையில் சமூக செயல்பாட்டாளர் முகிலன் தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதன் விசாரணை நடைபெற்றபோது, முகிலன் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவர் மீது உள்ள வழக்கு மட்டும் தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் முகிலன் கைது செய்யப்பட்டார். தற்போது திருச்சி சிறையில் உள்ள அவரை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர்.
முகிலன் தவிர மேலும் 3 பேரும் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையை அடுத்த (அக்டோபர்) மாதம் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.