செய்திகள்
கொலை செய்யப்பட்ட ரவுடி சரவணன்

தூத்துக்குடி ரவுடி கொலையில் வாலிபர் கைது

Published On 2019-08-28 05:04 GMT   |   Update On 2019-08-28 05:04 GMT
தூத்துக்குடி ரவுடி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவருடைய மகன் சரவணன் என்ற சிந்தா சரவணன் (வயது 36). இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி தாளமுத்துநகர், வடபாகம், சாயல்குடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சரவணன் மீது பிரபல ரவுடியான பட்டு என்ற பட்டுராஜை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இதனால் சரவணனை தாளமுத்துநகர் போலீசார் குற்றவாளிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த சரவணனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் சரவணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கன்னிராஜபுரத்தில் நடந்த பட்டுராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக சரவணன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரவணனை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய நெல்லை மேலகுளத்தை சேர்ந்த பெருமாள் மகன் மகராஜன் (29) என்பவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். மேலும் ஜான்சன், வடிவேல், முனியசாமி உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News