மன்னார்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 63), விவசாயி.
இந்த நிலையில் சதாசிவம், வேறொரு கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி, இந்த சம்பவம் பற்றி தனது தாயிடம் அழுதுக்கொண்டே கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தலையாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முதியவர் சதாசிவத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
மன்னார்குடி பகுதியில் பாலியல் வழக்கில் முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.