செய்திகள்
கொலை செய்யப்பட்ட மாணிக்கவாசகம் கிணற்றில் பிணமாக கிடக்கும் காட்சி.

திண்டுக்கல் அருகே சூதாட்ட தகராறில் தொழிலாளி படுகொலை

Published On 2019-08-02 06:03 GMT   |   Update On 2019-08-02 06:03 GMT
திண்டுக்கல் அருகே சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை, ஆக. 2-

திண்டுக்கல் அருகே சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள பிலாத்து வாலி செட்டிபட்டியைச் சேர்ந்தவர் மாணிக்க வாசகம் (வயது 50). செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி அங்காள ஈஸ்வரி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.

தினமும் மாலையில் வேலை முடிந்த பிறகு மாணிக்க வாசகம் மற்றும் சிலர் இதே பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று மாலையில் சூதாட்டத்தில் கலந்து கொண்ட மாணிக்க வாசகம் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது மனைவி நீண்ட நேரம் கணவரை தேடிப்பார்த்தார். இன்று காலை செங்கல் சூளை மற்றும் அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாணிக்க வாசகம் இறந்து கிடந்தார்.

சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து கிணற்றில் கிடந்த மாணிக்க வாசகத்தின் உடலை மேலே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு மாணிக்க வாசகத்துடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

வடமதுரை, கோவிலூர், எரியோடு, குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெற்று வருகிறது. போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காததால் பல முறை சூதாட்டம் கைகலப்பாகவும், மோதலாகவும் மாறி வருகிறது. தற்போது அதே பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * * * கொலை செய்யப்பட்ட மாணிக்கவாசகம் கிணற்றில் பிணமாக கிடக்கும் காட்சி.

Tags:    

Similar News