செய்திகள்
காதல் ஜோடி

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்

Published On 2019-07-31 10:11 GMT   |   Update On 2019-07-31 10:11 GMT
வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.

வடமதுரை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது20). வேடசந்தூர் அருகில் உள்ள புளியமரத்துகோட்டையை சேர்ந்தவர் சுபாஷ் (22). இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த விபரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதேபோல் வேடசந்தூர் அருகில் உள்ள கூம்பூரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(21). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேமில்லில் குளித்தலையை சேர்ந்த பிரியதர்ஷினி(19) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் வேடசந்தூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என அவர்களிடம் எழுதிவாங்கிக் கொண்டு காதலர்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News