ஈத்தாமொழி அருகே 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்
கன்னியாகுமரி:
ஈத்தாமொழியை அடுத்த புதூர் பகுதியில் 10-ம் வகுப்பு வரை படித்த 15 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.
10-ம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு செல்லாததால் அந்த சிறுமி வீட்டிலேயே இருந்தார். கடந்த மே மாதம் வீட்டில் இருந்த சிறுமியை திடீரென காணவில்லை.
பதறிபோன பெற்றோர் சிறுமியை பல இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதனால் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 15 வயது சிறுமியை நெடுவிளை பகுதியை சேர்ந்த தபீன் (வயது 20) என்ற வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது. அவர் சிறுமியை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அவரை மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்த அதிகாரிகள், அவரை கடத்தி சென்றது பற்றி சிறுமியிடம் விசாரித்தனர்.
இதில் வாலிபர் தபீன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி தபீன் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்தார்.
சிறுமி மீட்கப்பட்டதை தொடர்ந்து வாலிபர் தபீன் தலைமறைவாகி விட்டார். அவரை அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகிறார்கள்.