செய்திகள்
கொலையுண்ட ஆனந்த் தலை நசுங்கி பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.

திருச்சி அருகே தலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை

Published On 2019-06-25 09:37 GMT   |   Update On 2019-06-25 09:37 GMT
திருச்சி அருகே மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் பிரபல ரவுடியை தொழிலாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மகாளி குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் மீது சமயபுரம் போலீஸ் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

ஆனந்துக்கும், பள்ளி விடையை சேர்ந்த தொழிலாளி விஜய் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் விஜய் மனைவியுடன் பழகி வந்தார்.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். மேலும் ஆனந்த், விஜய் மனைவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். இதையறிந்த விஜய், தனது மனைவியையும், ஆனந்தையும் கண்டித்துள்ளார். இருப்பினும் ஆனந்த் கள்ளக்காதலை கைவிடவில்லை.

நேற்று காலை விஜய் அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அவரது மனைவியை, ஆனந்த் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன், ஆத்திரமும் அடைந்தார். ஆனந்தை இப்படியே விட்டு விட்டால் தனது குடும்பத்தையும், மனைவி வாழ்க்கையையும் சீரழித்து விடுவார் என்று எண்ணிய அவர், ஆனந்தை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்றிரவு சமயபுரம் நால்ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே உள்ள விறகு கடையில் ஆனந்த் தூங்கி கொண்டிருந்தார். இதையறிந்த விஜய் அங்கு சென்றார். அப்போது அங்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஆனந்தின் தலையில், விஜய் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் ஆனந்த் தூங்கிய நிலையிலேயே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள், ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து உடனடியாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆனந்தை கொலை செய்தவர்கள் யாரென்று விசாரணை நடத்திய போது, கள்ளக்காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News