செய்திகள்
வயநாடு அருகே காட்டுயானை தாக்கி வன ஊழியர் பலி
வயநாடு அருகே காட்டுயானை தாக்கி வன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் வயநாடு திருநெல்லாய் கிராம பஞ்சாயத்தில் உள்ளது துரம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கொம்பன் (வயது 56). பூஞ்சவயல் வனப்பகுதி வன ஊழியர்.
இவரது மனைவி சீதா (50), மற்றொரு ஊழியர் சோமன் ஆகியோர் நேற்று பூஞ்சவயல் வனப்பகுதி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.
அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது புதர்மறையில் இருந்த யானை கொம்பனை துதிக்கையால் சுழற்றி தூக்கியது. அதிர்ச்சியடைந்த மற்ற 2 பேரும் தப்பி ஓடினர். கொம்பனை தூக்கிய யானை அவரை கீழேபோட்டு மிதித்து அங்கிருந்த பள்ளத்தில் தள்ளியது.
தகவல் அறிந்ததும் மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.