திருச்சி விமான நிலையத்தில் ரூ.33.50 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்
கே.கே.நகர்:
துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகம்மது ஜவாஹிர் (வயது 26 ) என்ற பயணி தனது உடைமையில் மறைத்து ரூ.9.62 லட்சம் மதிப்புள்ள தலா 100 கிராம் எடை கொண்ட 3 தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது , மகேந்திரன் , கேசவன் செல்வேந்திரன் ஆகியோர் ரூ.22.43 லட்சம் மதிப்புள்ள 733 கிராம் தங்க ஆபரணங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக 3பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் ரெட்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இலங்கை நாட்டின் குடியுரிமையை பெற்ற இவர், போலி ஆவணங்கள் மூலம் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் திருச்சியில் இருந்து இலங்கை செல்ல முயன்றார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்த போது அவர், பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை அதிகாரிகள் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்தனர். #trichyairport