செய்திகள்

மதுரை-சென்னை வழித்தடத்தில் பயணத்தை தொடங்கியது தேஜஸ் ரெயில்: மோடி தொடங்கி வைத்தார்

Published On 2019-03-01 09:46 GMT   |   Update On 2019-03-01 10:01 GMT
மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். #TejasTrain #PMModi
கன்னியாகுமரி:

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பல்வேறு அரசுத் திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட அதிநவீன தேஜஸ் ரெயில் சேவையை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து தேஜஸ் ரெயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

தேஜஸ் ரெயில் துவக்க விழாவிற்காக மதுரை ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்தில் மேடை மற்றும் காணொலி திரை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேஜஸ் ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமரா, தீயணைப்புக்கருவிகள், தீ தடுப்பு அலாரம், தானாக மூடித்திறக்கும் கதவுகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிப்பறைகள், இருக்கையில் எல்.இ.டி. திரை வசதி, காலை உணவு, இரவு உணவு, டீ, பிஸ்கெட் ஆகிய வசதிகள் உள்ளன.



இந்த ரெயில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு மதுரையில் இருந்து சென்னை வரை டிக்கெட் பரிசோதனை செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் மாலை 3 மணிக்கு தேஜஸ் ரெயில் இயக்கப்படும். ஆனால், இன்று ஒரு நாள் மட்டும் மதியம் 2 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் தேஜஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. #TejasTrain

Tags:    

Similar News