செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே குடிக்க பணம் தராததால் அண்ணனை கொன்ற தம்பி

Published On 2019-01-18 13:55 GMT   |   Update On 2019-01-18 13:55 GMT
தேன்கனிக்கோட்டை அருகே குடிக்க பணம் தராததால் அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலத்தோட்டனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா மகன்கள் மாதேஷ் (வயது 28), கிருஷ்ணா (21). இவர்கள் 2 பேரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.

இதில் கிருஷ்ணா வேலை செய்யாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். அண்ணனிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி செலவு செய்து வந்தார். நேற்று இரவு குடிப்பதற்காக பணம் கேட்டார். ஆனால் மாதேஷ் பணம் கொடுக்கவில்லை. இதனால் அண்ணன், தம்பி 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கத்தி எடுத்து வந்த கிருஷ்ணா மாதேசை குத்தினார். உறவினர்கள் தடுத்து கத்தியை பிடுங்கினார்கள். ஆத்திரம் தீராத கிருஷ்ணா அரிவாளை எடுத்து வந்து அண்ணனின் தலையில் பின்பக்கம் அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்தார்.

பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா தப்பி ஓடிவிட்டார். சுருண்டு விழுந்த மாதேசை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இந்த கொலை குறித்து தளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து கிருஷ்ணாவை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News