செய்திகள்

பாகூர் அருகே மதுகுடிக்கும் போது தகராறில் மீனவர் குத்திக்கொலை

Published On 2018-12-21 05:41 GMT   |   Update On 2018-12-21 05:41 GMT
பாகூர் அருகே மதுகுடிக்கும் போது தகராறில் மீனவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்:

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது47), மீனவர். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ஸ்ரீதர் புதுவை வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியில் உள்ள உறவினர் முருகன் வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதர் நேற்று இரவு வீராம்பட்டினத்தில் உள்ள சாராய கடைக்கு சென்றார். அங்கு சராயம் குடித்து கொண்டு இருந்த போது இவருக்கும் வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கமல் (35) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கமலை ஸ்ரீதர் தாக்கினார்.

இதனால் ஸ்ரீதர் மீது கமல் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதர் சாராயம் குடிக்க சாராயக்கடைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த கமலுக்கும், ஸ்ரீதருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கமல் அங்கிருந்த சோடா பாட்டிலை உடைத்து ஸ்ரீதரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் இறந்து போனார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரஹீம் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்ததும் கமல் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News