சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளை திறக்க கோரி கிராம மக்கள் நடைபயணம்
சிவகாசி:
பட்டாசு உற்பத்தியின் மையமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனை தளர்த்தக் கோரி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த ஒருமாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
பட்டாசு ஆலைகளை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், ரிசர்வ்லைன், பாரைப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இன்று நடைபயணம் மேற்கொண்டனர்.
இவர்கள் ஆனையூரில் இருந்து சிவகாசிக்கு சென்றனர். அங்கு தாசில்தார், வருவாய் அதிகாரியை சந்தித்து பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு கொடுத்தனர்.