செய்திகள்

சத்துணவு ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் - முத்தரசன் வற்புறுத்தல்

Published On 2018-11-26 05:02 GMT   |   Update On 2018-11-26 09:42 GMT
சத்துணவு ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Eggnutritioncorruption #Mutharasan

சென்னை:

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் செயல் படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்திற்காக சத்து மாவு, பருப்பு, முட்டை ஆகியவைகளை சப்ளை செய்து, திருச்செங்கோடு நகரத்திலிருந்து இயங்கக்கூடிய கிறிஸ்டி நிறுவனத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை செய்து பல ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.

இந்த ஆவணங்களை பரிசோதித்ததில், இந்நிறுவனம் தமிழக அரசின் உயர் அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆட்சி பொறுப்பில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் ஆகியோருக்கு 2400 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஏற்கனவே பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளது. தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசுத் துறைகள் அனைத்தும் லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக்கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்டமெகா ஊழல் அம்பலமாகியுள்ளது.

 


இந்த மெகா ஊழல் பற்றி தமிழக அரசுக்கும் மத்திய விசாரணை முகமைக்கும் வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகின்றது.

ஊழல் மலிந்துபோன தமிழக அரசிற்கு தலைமையேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி ஊழல் புகார்களில் சிக்கியுள்ளதால் இந்த சத்துணவு திட்ட மெகா ஊழல் பற்றி சாரணைக்கு உத்தரவிட்டாலும் அது ஏமாற்று வேலையாகவே முடியும்.

தமிழகத்தில் அதிமுக அரசில் நடைபெறும் ஊழலை விசாரிப்பதுபோல் விசாரித்து பின்பு அதை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டி தன் அரசியல் லாபத்திற்கு பணியவைக்கும் வேலையை மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகின்றது.

இந்த சத்துணவு மெகா ஊழல் வி‌ஷயத்திலாவது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Eggnutritioncorruption #Mutharasan

Tags:    

Similar News