செய்திகள்

கோவை அருகே விபத்து- 3 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி

Published On 2018-11-16 15:03 GMT   |   Update On 2018-11-16 15:03 GMT
கோவை அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் 3 வாலிபர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிணத்துக்கடவு:

‘கஜா’ புயல் காரணமாக கோவை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சில இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. வாகனங்களில் சென்றவர்கள் மழை நீரில் ஊர்ந்தபடி சென்றனர். இந்நிலையில் கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் இன்று மதியம் 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தாமரைகுளம் அருகே உள்ள ஒரு கோவில் அருகே சென்ற போது எதிர் பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி தாறுமாறி ஓடியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் நடுரோட்டில் விழுந்தனர். அப்போது எதிரே பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த ஒரு கார் 3 பேர் மீதும் ஏறியது. இதில் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று பலியான வாலிபர்கள் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் ஒரு அடையாள அட்டை கிடந்தது. அதன் மூலம் நடத்திய விசாரணையில் பலியானவர்களில் ஒருவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தது தெரியவந்தது. மற்ற 2 வாலிபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

பலியான 3 வாலிபர்களும், சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் சென்ற போது, சறுக்கி விழுந்த போது தான் கார் ஏறி பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News