செய்திகள்

குழந்தை கொலையில் திருப்பம் - நரபலி கொடுத்த பெண் மந்திரவாதி கைது

Published On 2018-11-05 04:30 GMT   |   Update On 2018-11-05 04:30 GMT
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில் 3 வயது குழந்தை கொலை வழக்கில், பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #HumanSacrifice
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மகள் ஷாலினி (வயது 3) கடந்த மாதம் 26-ம் தேதி மாலை விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.



ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, குழந்தையை  கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். #HumanSacrifice
Tags:    

Similar News