செய்திகள்

மயிலம் அருகே 9 மாத கர்ப்பிணிக்கு பன்றி காய்ச்சல் - மருத்துவ குழுவினர் முகாம்

Published On 2018-10-23 05:15 GMT   |   Update On 2018-10-23 05:15 GMT
மயிலம் அருகே 9 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மருத்துவ குழுவினர் முகாம் ஆத்திக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். #Swineflu
மயிலம்:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனை தடுக்க சுகாதார துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கீழ் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் சுகன்யா என்பவர் பன்றி காய்ச்சல் தாக்கி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

மயிலம் அருகே உள்ள ஆத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி சாந்தி (வயது 35). இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட் களுக்கு முன்பு சாந்திக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்த அவர் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சாந்தியை தனிவார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் சாந்தியை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து வீரப்பன் தனது மனைவி சாந்தியை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆத்திக்குப்பம் கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் இருந்ததையொட்டி மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆத்திக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று யாருக்கும் காய்ச்சல் ஏதும் உள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர்.  #Swineflu

Tags:    

Similar News