ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் கல்யாண சுந்தரம், காசிநாதன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம் ஆகும். 4 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலபரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய நிலையில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவளித்து அமைதியாக உள்ளனர். உயிரே போனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். அதன் ஒரு கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #indiacommunistparty #hydrocarbonproject