செய்திகள்

கோவையில் முன்னாள் கலெக்டர் மகன் விபத்தில் மரணம்

Published On 2018-09-18 05:22 GMT   |   Update On 2018-09-18 05:22 GMT
கோவையில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் முன்னாள் கலெக்டர் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாநகராட்சி கமி‌ஷனராக கடந்த 2006-ம் ஆண்டு பணியாற்றியவர் முத்துவீரன்.

பின்னர் தேனி கலெக்டராக பதவி உயர்வு பெற்ற இவர் தற்போது பணி ஓய்வு பெற்று திருச்சியில் வசித்து வருகிறார்.

இவரது மகன் பிரனேஷ் பாபு(வயது 27) கோவையில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இவர் லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

இரவு முழுவதும் பயிற்சி மையத்தில் தங்கி படித்த இவர் இன்று அதிகாலை 3.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் வந்த போது, அவினாசி சாலையில் வந்த கார் ஒன்று காந்திபுரம் செல்வதற்காக பாப்பநாயக்கன்பாளையம் சாலைக்கு திரும்பியது.

அப்போது எதிர்பாராத விதமாக காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் பிரனேஷ் பாபு தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரனேஷ் பாபுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

பிரனேஷ்பாபு மீது மோதிய காரை பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(44) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் நாராயணராவ் என்பவர் உடன் வந்துள்ளார். விபத்தில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வீரம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிலிப் ஜான் (வயது 38). இவர் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள சவுத் இந்தியன் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று வேலை முடிந்ததும் இரவு 7.30 மணி அளவில் பிலிப் ஜான் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகம் அருகே சென்ற சென்ற போது அதே வழியாக கியாஸ் சிலிண்டர் லோடு ஏற்றிச் சென்ற லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலை யில் விழுந்த பிலிப் ஜான் படுகாயம் அடைந்தார். அப்பகுதி பொது மக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வீரம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் ரெஜிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News