திருவாரூர் அருகே பெட்ரோல் குழாய்களை பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் காக்காகோட்டூர் என்ற இடத்தில் சம்பா பயிர் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் நரிமணத்தில் இருந்து திருச்சிக்கு பெட்ரோல் கொண்டு செல்ல கடந்த 2012 -ம் ஆண்டு பணிகள் தொடங்கி விவசாயிகளின் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விவசாயிகளின் அனுமதியின்றி குழாய்களை பதிக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நள்ளிரவு காக்கா கோட்டூர் கிராமத்தில் ஐ.ஓ.சி. நிறுவன அதிகாரிகள் விளை நிலத்தில் குழாய்களை இறக்கினர்.
இன்று காலை விவசாய நிலங்களில் குழாய்கள் இறங்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இறக்கி வைக்கப்பட்ட ராட்சத குழாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது .சம்பா பயிரிடப்பட்டு முளைத்து 20 நாட்களே ஆன பயிர்கள் இருக்கும் நிலத்தில் அத்துமீறி ஐ.ஓ.சி நிறுவனம் குழாய் பதிக்க முயல்கிறது. இதனால் மூலங்குடி, காக்காகோட்டூர், சொரக்குடி, ஓமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் ஏக்கரில் சம்பா பயிர் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.