செய்திகள்

அதிமுக தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

Published On 2018-09-06 17:07 GMT   |   Update On 2018-09-06 17:07 GMT
அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி., அ.தி.மு.க தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். #ministerkadamburraju

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சிவன்கோவில் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட இணை செயலாளர் கவுரி, துணை செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. இதுவரை பெற்ற வெற்றிகள் அனைத்தும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் கிடைத்தது. இனிமேல் பெறும் வெற்றிதான் நாம் பெறும் வெற்றி. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் நமக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்தனர். அ.தி.மு.க. தேர்தலில் தோற்றாலும், நாம்தான் தோற்றோம். மக்கள் தோற்கடிக்கவில்லை என்று கூறுபவர் ஜெயலலிதா.

மக்களை ஒருபோதும் வசைபாடாதவர். தற்போது 1½ ஆண்டுகளாக ஜெயலலிதா வழியில் ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க.வுக்கு செக் வைத்து உள்ளோம். தற்போது அழகிரியால், தி.மு.க.வுக்கு குடைச்சல் வந்து விட்டது. தி.மு.க.வுக்கு இன்று முதல் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஒரு அணி உள்ளது. அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டிக் கொண்டு அம்மா ஆட்சி இருக்கக்கூடாது என்கிறார்கள். அவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வார். ஜெயலலிதா ஆன்மா, துரோகிகளை தண்டிக்காமல் விடாது. பலபிரச்சினைகளை தாண்டி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாவும், இறைவன் அருளும் உள்ளது.

அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. ஆகையால் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் வாக்காளர்களை சேர்க்க வேண்டும். தேர்தலின் போது பிரசாரங்களை எப்படி செய்ய வேண்டும் என்று விளக்குவோம். தொண்டர்களுக்கு தேவையானதை செய்வோம். தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

கூட்டத்தில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஒன்றிய விவசாய அணி தலைவர் வி.பி.ஆர்.சுரேஷ், தொழில்சங்க செயலாளர் டாக் ராஜா, பகுதி செயலாளர் முருகன், தலைமை கழக பேச்சாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerkadamburraju

Tags:    

Similar News