அட்டப்பாடி அருகே யானை தந்தம் கடத்திய கோவை வாலிபர் கைது
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட பறக்கும்படை வனத்துறை அதிகாரி தினேஷ்குமார், மன்னார்காடு வனத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி தோட்டத்தரை அருகே ரோந்து வந்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை விசாரணைக்காக அழைத்தபோது ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவர் தப்பி ஓடமுயன்றபோது அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்தனர்.
சிக்கிய அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது 2 யானை தந்தங்கள் இருந்தது. இது எப்படி கிடைத்தது என்று கேட்டபோது அவரிடம் பதில் இல்லை. இதனையடுத்து யானை தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் யானை தந்தம் கடத்திய வாலிபர் கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த பைசல் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள் மன்னார்காடு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய மற்றொரு நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.