செய்திகள்
பாதுகாப்பு வளையத்தை மீறி முதல்வரை நோக்கி வந்த வாலிபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய காட்சி.

பாதுகாப்பு வளையத்தை மீறி முதல்வரை நெருங்கி வந்த நாகை வாலிபர்

Published On 2018-06-18 09:04 GMT   |   Update On 2018-06-18 09:04 GMT
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு வளையத்தை மீறி முதல்வரை நெருங்கி வந்த நாகை வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்காக அங்கு திரண்டிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்களை பார்த்து அவர் உற்சாகமாக கையசைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிறகு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார்.

முன்னதாக முதல்வர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வரை சுற்றியும் பாதுகாப்பு வேலி அமைத்த போலீசார் தடுப்பு கம்புகள் மற்றும் கயிறு கட்டியிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பாதுகாப்பு வளையத்தை மீறி கருப்பு மற்றும் மஞ்சள் நிற கட்டம்போட்ட சட்டை அணிந்திருந்த வாலிபர் ஒருவர் முதல்வரை நோக்கி ஓடிவந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை எதிர்த்து வந்தனர். உடனே அந்த வாலிபர் நின்று பின்னர் திரும்பி ஓடினார்.

அவரை முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீசார் மற்றும் உளவுத்துறையினர் துரத்திச்சென்று பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். அவரை சோதனை செய்த போது எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அந்த வாலிபரை இழுத்து சென்று ஜீப்பில் ஏற்றி விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது அவரது பெயர் சபரிநாதன் (வயது 35) என்றும், நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

அவரது தாய் மகளிரணியில் நிர்வாகியாக இருப்பதாகவும், சத்துணவு அமைப்பாளராக அவர் பணியாற்றி வருவதாகவும், முதல்வரை வரவேற்கவே வந்ததாகவும் அந்த வாலிபர் தெரிவித்தார். ஆனாலும் ஏன் தடுப்பை மீறி முதல்வரை நெருங்கினார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
Tags:    

Similar News