செய்திகள்

பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை

Published On 2018-05-26 09:12 GMT   |   Update On 2018-05-26 09:12 GMT
பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

பாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

அவர்களில் ஒரு மகன் பால்பிரான்சிஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார். இவர் பாளை கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். ஞானப்பிரகாசமும், அந்தோணியம்மாளும் டி.வி.எஸ்.நகரில் வசித்து வந்தனர். நேற்று இரவு ஞானப்பிரகாசம் பணிக்கு சென்றுவிட்டார். அந்தோணியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது மகன் பால் பிரான்சிஸ் தனது தாய்க்கு போன் செய்தார். வெகுநேரம் போன் அடித்தும் போனை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த பால் பிரான்சிஸ் வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு அந்தோணியம்மாள் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தில்லைநாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணியம்மாளை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின்போது அந்தோணியம்மாள் கழுத்தில் கிடந்த நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் நகைக்காக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர். நிலத்தகராறு அல்லது வேறு பிரச்சினைகளில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலை பற்றி விசாரணை நடத்தவும், கொலையாளிகளை பிடிக்கவும் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News