செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி: முன்னாள் எம்.பி.ரித்தீஷ் உள்பட 2 பேர் மீது வழக்கு

Published On 2018-05-25 09:33 GMT   |   Update On 2018-05-25 09:33 GMT
திண்டிவனம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக முன்னாள் எம்.பி.ரித்தீஷ் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எறையானூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 35). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பயிற்சி முடித்துள்ளார்.

இவரிடம் திண்டிவனம் நல்லியகோடான் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதை ஜெயபாலன் நம்பினார். அவர் கண்ணனிடம் தனக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று கண்ணன் கூறினார்.

இதையடுத்து ஜெயபாலன் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.7 லட்சத்தை கண்ணனிடம் கொடுத்தார்.

இந்த பணத்தை கண்ணன் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் கண்ணனும், ரித்தீசும் ஜெயபாலனுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர்களிடம் சென்று தன்னுடைய பணத்தை திருப்பித்தருமாறு ஜெயபாலன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன் பேரில் ரித்தீஷ், கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
Tags:    

Similar News