செய்திகள்

திருக்கோவிலூர் மாணவன் கொலை: கைதான புவனகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2018-05-24 12:33 GMT   |   Update On 2018-05-24 12:33 GMT
திருக்கோவிலூர் அருகே மாணவன் கொலையில் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புவனகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி. கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இரவு ஆராயி, அவரது மகள் தனம், 4-ம் வகுப்பு படித்து வந்த அவரது மகன் சமயன் ஆகிய 3 பேர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அவர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

இந்த சம்பவத்தில் மாணவன் சமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். படுகாயமடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் குற்றவாளியை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். ஆனால் 2 மாதமாக குற்றவாளி சிக்கவில்லை. போலீசாருக்கு சவாலாக இருந்த இந்த வழக்கில் கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் (37) என்பவரை அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கைதான தில்லைநாதன், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையொட்டி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்படி தில்லைநாதனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் தில்லைநாதனை குண்டர் சட்டத்தின் கீழ் அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் தில்லைநாதனுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News