செய்திகள்

பாலக்காடு அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2018-05-20 12:26 GMT   |   Update On 2018-05-20 12:27 GMT
பாலக்காடு அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் பருத்திபுள்ளி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- பாக்கியம் தம்பதி மகன் சுதீஷ்குமார் (வயது 28). கடந்த வாரம் ஒரு திருட்டு வழக்கில் கோட்டாய் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அனுப்பி விட்டனர்.

விசாரணைக்கு வருமாறு செல்போன் மூலம் போலீசார் அழைத்தனர். இதனால் மனம் உடைந்த சுதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டார்.

தூக்கில் உயிருக்கு போராடிய சுதீஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு காழ்ச்சைபரம்பு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அவரது பெற்றோர் கூறும்போது, சந்தேகத்தின் பேரில் போலீசார் எனது மகனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கும் திருட்டுக்கும் தொடர்பு இல்லை என்று அனுப்பி விட்டனர்.

அப்போதே சுதீஷ் குமார் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்கு சமாதானம் செய்தோம். இந்நிலையில் மீண்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு எங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாய் போலீசார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.

Tags:    

Similar News