மேற்கு மாம்பலம் அழகு நிலையத்தில் அரிவாளுடன் புகுந்த 3 கொள்ளையர்கள்
சென்னை:
மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் பியூட்டி பார்லர் உள்ளது. இதனை சுனில்குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று பியூட்டி பார்லரில் பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர்.
அப்போது 3 கொள்ளையர்கள் அழகு நிலையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் முதலில் கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டித்தனர். பின்னர் அரிவாளை காட்டி பெண்களை மிரட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அழகு நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது வீட்டில் இருந்தபடியே சுனில்குமார் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த அவர் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது 3 கொள்ளையர்களும் பெண்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். போலீசார் கொள்ளையர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பல்லாவரத்தை சேர்ந்த சுதாகரன், வடபழனியை சேர்ந்த தம்சு இம்மத், கோடம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 அரிவாள், 7 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.