செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2018-04-12 10:03 GMT   |   Update On 2018-04-12 10:03 GMT
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #TheniFire #NGT

சென்னை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி கடந்த 15-ம் தேதி பரிதாபமாக மரணமடைந்தனர். 

மறுநாளில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி சிகிச்சை பலனின்றி மறுநாளில் உயிரிழந்தார். 

அடுத்தடுத்த நாட்களில் மேலும் சிலர் பலியாக பலி எண்ணிக்கை 23 ஆனது. இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காட்டுத்தீ போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, குரங்கணி காட்டுத்தீ தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அளிக்கப்பட்ட இழப்பீடுகள் குறித்து பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. #TheniFire #NGT
Tags:    

Similar News