ஆழ்வார் திருநகரில் மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளை
சென்னை:
ஆழ்வார் திருநகர் சரசுவதி நகர் 5-வது தெருவில் சசிக்குமார் என்பவவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் மேல் தளத்தில் சசிகுமாரின் வீடு இருக்கிறது.
நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறந்தபோது கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. ஏற்கனவே கடையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உளளது. அந்த கேமிராவை ஆய்வு செய்தபோது சினிமா காட்சி போல் கொள்ளை அடித்த காட்சி இடம் பெற்றிருந்ததை பார்த்து திடுக்கிட்டார்.
நள்ளிரவு 1.50 மணி. பேண்ட்-சட்டை அணிந்த படி ஒரு வாலிபர் கையில் கடப்பாரையுடன் வருகிறார். சுற்றும் முற்றும் வீடுகள் இருந்தும் எவ்வித பதட்டமும் இல்லாமல் அந்த வாலிபர் சர்வசாதாரணமாக கடையின் பூட்டை உடைத்து ஷட்டறை தூக்கினார்.
கடையின் உள்ளே சென்று கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை அள்ளி பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டார். பின்னர் வேறு எங்காவது பணம் இருக்கிறதா என்பதை கடைக்குள் அங்கும்மிங்கும் சுற்றி சிறிது நேரம் பார்த்தார். அதன்பிறகு சாவகாசமாக வெளியே வந்து ஷட்டறை இழுத்து மூடிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வீடியோ பதிவை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.