பழனி அருகே அ.தி.மு.க கம்பத்தில் பா.ஜனதா கொடி
பழனி:
பழனி அருகே மானூர் கிராமத்தில் தி.மு.க, அ.தி.மு.க காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் பா.ஜனதா கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இந்த விசயம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஏராளமான கட்சி தொண்டர்கள் ஒன்றுகூடினர். கீரனூர் போலீசாருக்கு பா.ஜனதா கட்சியினர் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி முத்துராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட பா.ஜனதா கொடியை இறக்கினர்.
இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு இப்பகுதியில் மர்மநபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். எனவே அவர்கள்தான் கொடியை மாற்றி ஏற்றி இருக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
பா.ஜனதா கிளை செயலாளர் முருகன், அ.தி.மு.க கிளைச்செயலாளர் முருகன், வெள்ளியங்கிரி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரையும் ஏற்றுக்கொண்ட போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் பா.ஜனதா கொடி பறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.