செய்திகள்

ரத யாத்திரையை மறிக்க சென்ற திருமாவளவனை கைது செய்தது போலீஸ்

Published On 2018-03-20 04:02 GMT   |   Update On 2018-03-20 04:02 GMT
விஎச்பி ரத யாத்திரையை மறித்து போராட்டம் நடத்துவதற்காக செங்கோட்டை நோக்கி சென்ற திருமாவளவனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் இந்த ரத யாத்திரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

ரத யாத்திரைக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரையை மறிக்கப்போவதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கூறியிருந்தன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று கேரளாவில் இருந்து செங்கோட்டைக்கு ரத யாத்திரை வர உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரத யாத்திரையை மறித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறியிருந்தது. இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருமாவளவன் அங்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரை பாறைப்பட்டியில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல் மறியல் போராட்டத்தில் பங்கேற்க சென்ற ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் சிலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News