தஞ்சை பெரியகோவிலில் சிலை திருடியவர்களை கைது செய்ய வேண்டும்- பெ.மணியரசன்
கும்பகோணம்:
தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமரை சந்திக்க தேதி கேட்ட போது அவர் மறுத்து மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இது 8 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயல். அரசியல் கூட்டமைப்புகளைப் புறக்கணிப்பதாகும். பிரதமரின் நடவடிக்கை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போவதில்லை என்பதை காட்டுகிறது.
மத்திய அரசு தமிழகத்தை மூன்றாம் தரமான ஒதுக்கப்பட்ட மாநிலமாக கருதுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உச்ச நீதி மன்ற தீர்ப்பை ஒத்து கொள்ளவில்லை.
எனவே தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டும். காவிரி பிரச்சனைக்காக நாடு தழுவிய அளவில் போராடங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜ சோழன் வழங்கிய 66 தங்க சிலைகள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறங்காவலர் பொறுப்பில் இருந்து பாபாஜி ராஜா போன்ஸ்லேவை நீக்க வேண்டும்.
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews