செய்திகள்

பஸ் தொழிலாளர்கள் சம்பளத்தை மேலும் உயர்த்த முடியாது- கோர்ட்டில் அரசுத் தரப்பு வாதம்

Published On 2018-03-01 11:30 GMT   |   Update On 2018-03-01 11:30 GMT
பஸ் தொழிலாளர்கள் சம்பளத்தை மேலும் உயர்த்த முடியாது என்று கோர்ட்டில் அரசுத் தரப்பு வாதடியுள்ள நிலையில் வருகிற சனிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. #TNTransportstrike #Bussalary

சென்னை:

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கல் சமயத்தில் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர். ஆனால் தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் 2.44 சதவீத ஊதிய உயர்வு போதாது 2.57 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

8 நாட்களுக்கு மேல் போராட்டம் நீடித்ததால் கோர்ட்டில் வழக்கு தொட ரப்பட்டது. இதில் அரசு தரப்பு, தொழிற்சங்க தரப்பு நியாயங்களை கேட்டு மத்தியஸ்தம் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை கோர்ட்டு நியமித்தது.

இவர் தனது விசாரணையை தொடங்கி உள்ளார். அடையாரில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெறும் இந்த விசாரணையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் தங்களது தரப்பு வாதங்களை எடுத்து கூறி 2.57 சதவீத சம்பள உயர்வு தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் அரசு தரப்பு வக்கீல் வாதாடுகையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு அதிகப்படியானதுதான். இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஊதிய உயர்வு அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல்வேறு தொழிற் சங்கங்கள் ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட்டுள்ளனர். எனவே இதற்கு மேலும் ஊதிய உயர்வு அளிக்க இயலாது. நிதி நிலைமையையும் பார்க்க வேண்டி உள்ளது என்று வாதிட்டுள்ளார்.

தொழிலாளர் தரப்பு வாதம் -அரசு தரப்பு வாதம் முடிந்துள்ள நிலையில் வருகிற சனிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

இதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அண்ணா தொழிற்சங்கம் உள்பட சில சங்கங்கள் வாதாட உள்ளன.

இதுபற்றி தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில், நாங்கள் 2.57 சதவீத சம்பள உயர்வு கேட்கிறோம். ஆனால் அண்ணா தொழிற் சங்கத்தினர் 2.44 சதவீத சம்பள உயர்வு போதுமானது என்று வாதாட இருப்பதாக தெரிகிறது.

இதில் நீதிபதி என்ன தீர்ப்பு சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என தெரிகிறது. நீதிபதி சொல்வதை ஏற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். #TNTransportstrike #Bussalary #tamilnews

Tags:    

Similar News