செய்திகள்

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Published On 2018-02-24 12:56 GMT   |   Update On 2018-02-24 13:00 GMT
தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி இன்று பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். #JayalalithaaBirthday #PMModi #AmmaTwoWheelerScheme

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 



அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி, மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வரவேற்றார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கதுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கலைவாணர் அரங்க வளாகத்தில் செண்டை மேளம் உள்ளிட்ட கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தனர். பிரதமர் காரில் வந்த வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கையசைத்து வரவேற்றனர்.



கலைவாணர் அரங்க வளாகத்தில் ஜெயலலிதாவின் நினைவாக 70  லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கவர்னர் பன்வரிலால் புரோகித் உடன் தொடங்கிவைத்த பிரதமர் மோடி தண்ணீர் ஊற்றினார். அதன்பின் அங்கு முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற “அம்மா ஸ்கூட்டர் திட்டம்” தொடக்க விழாவில்  மோடி பங்கேற்றார்.

துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை உரையாற்றினார்.  இவ்விழாவில் ஐந்து பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி விரைவில் விழா மேடையில் சிறப்புரையாற்றவுள்ளார். #Jayalalithaa #JayalalithaaBirthday #PMModi #AmmaTwoWheelerScheme #tamilnews
Tags:    

Similar News