செய்திகள்

திருவாசகம் படித்து சிறையில் பொழுதை போக்கும் துணைவேந்தர் கணபதி

Published On 2018-02-18 10:17 GMT   |   Update On 2018-02-18 10:17 GMT
துணைவேந்தர் கணபதிக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்படாததால் சாதாரண அறையில் திருவாசகம் புத்தகம் படித்து பொழுதை கழிக்கிறார்.
கோவை:

கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த கணபதி ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரை 5 நாள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் லஞ்சமாக வாங்கிய ரூ. 29 லட்சத்துக்கான காசோலை எங்கே? என போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்த பதிலும் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை.

வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பேரில் துணை வேந்தருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்கள் உள்பட சிலரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் தொலை தூர கல்வி மைய இயக்குனர் மதிவாணன், கணபதியின் மனைவி சொர்ணலதா ஆகியோ ரிடமும் இன்னும் ஓரிரு நாட்களில் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். போலீஸ் காவல் முடிந்து நேற்று முன்தினம் கணபதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 2-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கணபதி மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான துணைவேந்தர் கணபதி தனக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை கலெக்டர் தான் பரிந்துரை செய்து முதல் வகுப்பு வழங்க முடியும் என நீதிபதி தெரிவித்து இருந்தார். அதன் படி கலெக்டர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் கணபதிக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்படவில்லை. அவர் சாதாரண அறையில் தான் அடைக்கப்பட்டு உள்ளார். இரவு நேரத்தில் அவர் கொசுக்கடியில் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

சிறையில் திருவாசகம் புத்தகம் படித்து கணபதி பொழுதை போக்கி வருகிறார். கணபதியுடன் கைதான பேராசிரியர் தர்மராஜூம் தனக்கு முதல் வகுப்பு கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அவருக்கும் முதல் வகுப்பு கிடைக்கவில்லை. #tamilnews

Tags:    

Similar News