செய்திகள்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது- கடம்பூர் ராஜு பேட்டி

Published On 2018-02-16 14:56 GMT   |   Update On 2018-02-16 14:56 GMT
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டை அமைச்சர் கடம்பூர் ராஜு மறுத்துள்ளார். #ministerkadamburraju

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்பட்டி மக்களின் 40 ஆண்டுகால கனவு திட்டமான சீவலப்பேரியில் இருந்து தனிக்குடிநீர் திட்டமாக 2-வது குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டப்பணியை தொடங்கி வைத்தார். தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் 25-ந்தேதி கோவில்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று திட்டத்தினை மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்வது மட்டுமின்றி, புதிய திட்டபணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சிகாலத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது தி.மு.க. ஆட்சி நடந்தது. கோவையில் குண்டு வெடித்த போதும் தி.மு.க. ஆட்சி தான் நடந்தது. அதனை தான் மறதியாக அவர் சொல்லி இருப்பார். ஜெயலலிதா ஆட்சியிலும், அவரின் வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து கூற அவர் தகுதியானவர் அல்ல. தகுதியான நபருக்கு தான் பதில் சொல்ல முடியும். 24 மணிநேரமும் தன்னிலை அறியாதவருக்கு பதில் சொல்லவேண்டியதில்லை என்றார்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ministerkadamburraju

Tags:    

Similar News