கயத்தாறு அருகே மரத்தில் தலைகீழாக தொங்கி காங். பிரமுகர் போராட்டம்
கயத்தாறு:
கயத்தாறு அருகே ஒனமாக்குளம் கிராமத்தில் ஊருக்கு கிழக்கே ஒரு ஊரணி உள்ளது. இந்த ஊரணி 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு தனி நபர்கள் மண் அள்ளுவதை கண்டித்தும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வக்கீல் பிரிவு தலைவர் அய்யலுசாமி பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினார்.
ஆனால் இதுவரை ஊரணியில் மணல் அள்ளப்படுவதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அய்யலுசாமி இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்று காலை 6.30 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊரணிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அய்யலுசாமி அங்குள்ள ஆலமரத்தில் தலைகீழாக தொங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தலைவர் செல்லத்துரை, கிராம கமிட்டி தலைவர் சுப்பையா, விவசாய சங்க தலைவர் கணேஷ்குமார், செயலாளர் விக்னேஷ், வேல்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.