ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 2 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ரகீம்குட்டி (வயது 48). இவர் அப்துல் ரகுமான்(50), அப்துல் கரீம் (52), அலிஅக்பர் சலீம் (57) ஆகியோருடன் காரில் நாகூர் சென்றார்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் சென்று கொண்டிருந்தது. மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
அதற்குள் ரகீம் குட்டி, அப்துல் ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews