செய்திகள்

பெரம்பலூர் அருகே கணவனை அரிவாள் மனையால் வெட்டிக்கொன்ற மனைவி

Published On 2018-01-18 15:01 GMT   |   Update On 2018-01-18 15:01 GMT
பெரம்பலூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அரிவாள் மனையால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டமாந்துறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). இவரது மனைவி லூர்துமேரி (43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

செல்வராஜ் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 10 வருடங்களாக தோல் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது மது குடித்து விட்டு வந்து லூர்துமேரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்றிரவு கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தூங்கி விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென எழுந்த லூர்துமேரி அரிவாள் மனையால் தூங்கி கொண்டிருந்த செல்வராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கால்களில் பலத்த வெட்டு விழுந்தது. பின்னர் கொடுவாளால் கழுத்தில் வெட்டினார். இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி. கார்த்திக்கேயன் மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கணவனை வெட்டிக்கொன்ற லூர்து மேரி இன்று காலை பெரம்பலூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வராஜ் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்ததால் லூர்துமேரி ஆத்திரத்தில் கணவனை கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News