மேச்சேரி அருகே அம்பேத்கார் சிலை மீது பெயிண்ட் பூசியதால் பொதுமக்கள் மறியல்
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியில் அம்பேத்கார் சிலை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கார் சிலை முகத்தில் சிவப்பு கலரில் பெயிண்டை ஊற்றி உள்ளனர். இதையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்த சிலர் அம்பேத்கார் சிலை மீது பெயிண்ட் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இந்த சம்பவம் குறித்து கூறினர். இந்த செய்தி காட்டுத்தீபோல் அப்பகுதியில் பரவியது.
ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து மல்லிகுந்தம் - கூணான்டியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் அம்பேத்கார் சிலை மீது பெயிண்டை ஊற்றியவர்களை உடனே கைது செய்தால்தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்றும் அதுவரை நாங்கள் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறியும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் தொடர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் மேலும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. #tamilnews