செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம்

Published On 2017-12-23 06:32 GMT   |   Update On 2017-12-23 08:04 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ராமேசுவரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
ராமேசுவரம்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று காலை 10.15 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், கலெக்டர் வீரராகவராவ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.



அதன் பின்னர் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். கோவில் வாசலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் இருந்து கலசங்களில் சேகரித்த புனித நீர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சுவாமி மற்றும் அம்மன் சன்னதிக்கு சென்று அவர் தரிசனம் செய்தார். அவருடன் மனைவி மற்றும் மகள் வந்திருந்தனர். கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் அவருக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுலா மாளிகை சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். 

ஜனாதிபதி வருகையை யொட்டி ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், கடல் பகுதியை தீவிரமாக கண்காணித்தன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News