செய்திகள்
பிரசாந்தி

தோழி இறந்த கவலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-12-21 09:58 GMT   |   Update On 2017-12-21 09:58 GMT
திருநாவலூர் அருகே தோழி இறந்த கவலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது மகள் பிரசாந்தி(வயது16).இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

திருநாவலூரை அடுத்த ஆவலம் கிராமத்தை சேந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ரசிகா(16). இவரும், பிரசாந்தி படிக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இருவரும் இணைபிரியாத தோழிகள் ஆவார்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்வார்கள்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகாவுக்கு மர்மகாய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகாமல் இறந்து போனார். ரசிகா இறந்ததை அறிந்ததும் அவரது தோழி பிரசாந்தி மனவேதனை அடைந்தார்.

வீட்டில் யாரிடமும் பேசாமலும், உணவு உட்கொள்ளாமலும் அமைதியாக இருந்து வந்தார். தோழி இறந்து விட்டாளே என்று கண்ணீர் வடித்தப்படி இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறினர்.

இன்று அதிகாலை பிரசாந்தி வீட்டின் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் பிரசாந்தின் தந்தை வேல்முருகன் எழுந்து வெளியே வந்தார்.

மாட்டு கொட்டகையில் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய பிரசாந்தியின் உடலை கீழே இறக்கினர்.

தோழி இறந்த கவலையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News