செய்திகள்

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக போலீஸ்காரர் கைது

Published On 2017-12-18 07:57 GMT   |   Update On 2017-12-18 07:58 GMT
இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 25). இவர் மணிமுத்தாறு 5-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் (முகநூல்) மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது தமிழரசன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழரசனிடம், அந்த பெண் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் புகார் செய்தார். போலீஸ்காரர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க அம்பை அனைத்து மகளிர் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழரசனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தமிழரசனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News